கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவினால், சர்வதேச பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படும் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் உகான் நகரத்தில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. சீனாவில் வைரஸ் தொற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கை 2,715 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 78,064 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், 29,745 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஆனால், இந்த வைரஸ் தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. தென் கொரியாவில் 11 பேர் பலியாகி உள்ளனர். 1,146 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 11 பேர் பலியாகி உள்ளனர். 323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் 15 பேர் பலியாகி உள்ளனர். 95 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவினால், சர்வதேச பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படும் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மூடிஸ் நிறுவனம் கூறுகையில், ”கொரோனா வைரஸ், சர்வதேச பொருளாதாரத்தில் பல வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. உலகின் பல நாடுகள், சீனாவுக்கான விமான சேவை, கடல் வழி சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், 3 மில்லியன் சீன சுற்றுலா பயணிகள் உலக நாடுகளுக்கு வருவது நிருத்தப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் பிரச்சனையை சந்திக்க நேரிடும் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.